Wednesday 20 July 2016

இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 14.27 சதவீதம் உடனடி சம்பள உயர்வு


பதிவு: ஜூலை 19, 2016 10:49
      
மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஏற்பாடாக குறிப்பிட்ட அளவு சம்பளத்தை மட்டும் உடனடியாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 14.27 சதவீதம் உடனடி சம்பள உயர்வு
புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மாற்றி அமைக்கப்படுகிறது. சம்பளத்தை மீண்டும் மாற்றி அமைப்பது தொடர்பாக ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த குழு தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கியது.

அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

இதுபற்றி முடிவு எடுப்பதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், 23.55 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த சம்பள உயர்வு போதாது என்று மத்திய ஊழியர் சங்கங்கள் மற்றும் ரெயில்வே ஊழியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கின.

கடந்த 13-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இதையடுத்து மத்திய மந்திரிகள் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், புதிய குழு ஒன்று அமைத்து சம்பளம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இதனால் 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசு உடனடியாக அமலுக்கு வரவில்லை. அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்தனர்.

7-வது சம்பள கமி‌ஷனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால் கடந்த ஜனவரி மாதமே முன் தேதியிட்டு சம்பள உயர்வு அமலுக்கு வந்து இருக்கும். இப்போது புதிய குழு அமைக்கப்பட இருப்பதால் சம்பள உயர்வு அமலுக்கு வர தாமதமாகும்.

இதனால் இடைக்கால ஏற்பாடாக குறிப்பிட்ட அளவு சம்பளத்தை மட்டும் உடனடியாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

7-வது சம்பள கமி‌ஷனில் அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கலாம் என்று கூறி இருந்தனர். இப்போது 14.27 சதவீத அடிப்படை சம்பளத்தை மட்டும் கூடுதலாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பஞ்சப்படி மற்றும் இதர சலுகைகள் உயர்வும் கிடைக்கும்.

புதிய குழு பரிந்துரை வந்ததற்கு பிறகு அதை கணக்கிட்டு கூடுதல் சம்பளம் பின்னர் வழங்கப்படும்.

தற்போதைய சம்பள உயர்வும் ஜனவரி மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான 6 மாத சம்பள பாக்கியும் கூடுதலாக கிடைக்கும்.


Source: http://www.maalaimalar.com



0 comments:

Post a Comment