Monday 28 December 2015

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.

வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல்,     தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்


Source: Dinakaran

0 comments:

Post a Comment